புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த மாதம் 22ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இந்த கோயில் திறப்பு விழாவுக்கு பா.ஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக விஷ்வ இந்து பரிசத் தெரிவித்தது. ஆனால் ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், மூத்தவர்கள் இங்கு வர வேண்டாம். அத்வானி, ஜோஷி ஆகிய இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள். அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவில் முன்னாள் பிரதமரும், 90 வயதை கடந்தவருமான தேவகவுடா அழைக்கப்படுவார்’ என்றார். தற்போது 96 வயதாகும் அத்வானி மற்றும் 89 வயதாகும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ராம ஜென்மபூமி இயக்கத்தை வழிநடத்தினர். அத்வானி 1990ம் ஆண்டு குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு ஆதரவைத் திரட்டினார். 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் அங்கு இருந்தனர்.