திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டையில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியை வருவாய் கோட்டாட்சியர் தீபா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ராமு உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இதேபோல் திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உங்கள் வாக்கு உங்கள் குரல் கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி நடந்தது. இந்த போட்டிகளை வருவாய் கோட்டாசியர் தீபா தொடங்கிவைத்தார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டாட்சியர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.