பள்ளிப்பட்டு: கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே திருமல்ராஜ்பேட்டையில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், நகரியாறு உப வடிநில பகுதி தொகுப்பு 1-ன் கீழ் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து தானுவாசு கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை திருத்தணி கோட்ட உதவி இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்து கறவை மாடுகளுக்கு தானுவாசு கிராண்ட் ஊட்டச்சத்து மருந்து வழங்கினார். இதில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முனைவர் மு.சுகந்தி, பால் உற்பத்தியை அதிகரிக்கவும் செரிமான தன்மை அதிகப்படுத்தவும் கால்நடை வளர்போர் தங்களது கறவை மாடுகளுக்கு தானுவாசு கிராண்ட் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்.
ஒரு மாட்டிற்கு தனுவாசு கிராண்ட் ஊட்டச்சத்து மருந்தை 20 மில்லி கொடுப்பதால், அமில நோய் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் முகுந்தன், பரணி, தமிழன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வராலு மற்றும் கால்நடை வளர்ப்போர் இதில் பங்கேற்றனர்.