சென்னை: சென்னை ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையகத்திற்குட்பட்ட முத்தாபுதுபேட்டை என்ற பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற கடையை நடத்தி வருகிறார். இந்த பகுதியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் யார் வருகிறார்கள்? போகிறார்கள்? என்பது தெரியாது. அதுவும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்பகுதியில் அதிகம் குடியிருக்கின்றனர்.
இந்நிலையில் பட்டப்பகலில் காரில் இருந்து இறங்கி நகைக் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். தொடர்ந்து, நகை கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மகும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. நகைக்கடை உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரில் கொள்ளையர்களை காவல்துறை வலைவீசி தேடுகிறது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி துணை ஆணையர் ஐமல் ஜமால், ஆய்வாளர்கள் சாய் கணேஷ், திருவள்ளுவர் உள்ளிட்ட காவல் துறை தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.