திருவொற்றியூர்: எண்ணூரில் மூடப்பட்ட உர தொழிற்சாலையை மீண்டும் திறக்க கோரி தொழிலாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உர தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள குழாயில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, அமோனியா வாயு கசிந்து சுற்றுவட்டாரத்தில் பரவியது. இதனால் சுற்றியுள்ள தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்பட 33 கிராம மக்கள் மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
இதனால், அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், எண்ணூர் தனியார் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக்கோரி, 33 கிராம மக்கள் தொடர்ந்து 62வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில், தொழிற்சாலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளதால், சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, இந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று தொழிற்சாலை உள்ளே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.