திருப்போரூர்: திருப்போரூர் நெம்மேலி சாலையில் தனியார் உப்பு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தினமும் தொழிற்சாலையில் வேலை செய்து விட்டு, அருகே உள்ள அவர்களது குடியிருப்பில் தங்கச் செல்வர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் தங்களது குடியிருப்பில் தங்கி இருந்தபோது, ஆட்டோ ஒன்றில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி அவர்களிடமிருந்து சூட்கேஸ் ஒன்றை எடுத்துச் சென்றது.
மேலும், கடந்த மாதம் இதே குடியிருப்பில் இருந்த வடமாநில நபர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் பர்ஸ் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.