சென்னை: கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி அமைச்சர் எ.வ.வேலு பலமுறை கேரளா, வைக்கம் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று வைக்கம் சென்று, சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில், நூலகம் 2582 சதுரடி பரப்பளவிலும், அருங்காட்சியம் 1891 சதுரடி பரப்பளவிலும் அமைந்துள்ளது. ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள், இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் சந்திரமோகன், சிறப்பு அலுவலர் விஸ்வநாத், முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் காசிலிங்கம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.