டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. அஷ்வின் 5, ஜடேஜா 3, சிராஜ், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய தரப்பில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன்களும் ரோகித் ஷர்மா 103 ரன்களும் விளாசினர்.
விராட் கோஹ்லி தனது பங்கிற்கு 76 ரன்கள் அடித்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆடுகளம் சூழலுக்கு ஒத்துழைத்ததால் அஷ்வின், ஜடேஜா இருவரும் பேட்டர்களை திணறடித்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 130 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பில் வெகு சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து இருந்தார். ஜடேஜா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார்.இதன் மூலம் இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.