Saturday, May 18, 2024
Home » ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

by Kalaivani Saravanan

இனிய திருமண வாழ்வு

1. லக்கினத்தில் சுக்கிரன் மூன்றில் புதன் நாலில் குரு உள்ள பெண்ணுக்கு அரச போகத்துடன் உள்ள கணவன் அமைவான்.

2. பூரண சந்திரன் நாலில் உச்சமாக இருக்க, குருவின் பார்வையும் பெற்றால் அந்தப் பெண் மகா பாக்கியவதி ஆவாள்.

3. மிதுன லக்னத்தில் சந்திரனும் 11-ல் சூரியனும், பத்தில் புதனும் உள்ள பெண்ணின் கணவன் ராஜயோகம் அடைவான்.

4. கன்னியில் புதன் நின்று லக்கினமாக இருக்க, குரு 11-ல் சுக்கிரன் இரண்டில் பத்தில் சந்திரன் இருந்தால், அந்தப் பெண்ணின் கணவன் மிகச்சிறிய அந்தஸ்தோடு சக்கரவர்த்தி போல் வாழ்வான்.

5. சுக்கிரனும், புதனும் இணைந்து லக்னத்தில் நின்றால், அவன் மனைவியிடம் அல்லது கணவரிடம் அன்பு அதிகம் உடையவனாக இருப்பான்(ள்). நல்ல புத்திசாலித்தனமும் இருக்கும். திருமணத்தடைகள் நீங்க இந்த மாதம் மார்கழி மாதம். மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். ஆனால், இதை வழக்கத்தில் பீடை மாதம் என்று தவறாகச் சொல்லுகின்றார்கள். மார்கழி மாத வழிபாடுகள் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

குறிப்பாக, இந்த மாதத்தில் திருமணம் முதலிய சுபகாரியங்களை நடத்த மாட்டார்கள். ஆனால் திருமணத்தடை, ஜாதக தோஷம், களத்திர தோஷம் உடையவர்கள், மார்கழி மாதத்தில் விடிகாலையில் எழுந்து, இறைவனை வணங்குவது அவர்களுடைய தோஷத்தைக் குறைக்கும். குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த மாதத்தில் காலையில் எழுந்து பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி முதலிய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், தாங்களே காலையில் எழுந்து வீட்டில் விளக்கேற்றி வைத்து திருப்பாவை, திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடி வருவதும். திருமணத் தடைகளை நீக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல், இவர்கள் தொடர்ந்து இந்தக் காரியத்தை மார்கழி மாதத்தில் செய்யும் பொழுது தை மாதத்தில் மகத்தான ஒரு வழி பிறக்கும்.

அரசாங்க காரியங்கள் அனுகூலமாக வேண்டுமா?

அரசாங்க காரியங்கள் சிலருக்கு கை வசப்படும். அவர்கள் ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் கொடுத்தாலே அவர்களுக்கு நடந்து விடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக நடைபெற வேண்டும் என்று சொன்னால், காலம் கருதிச் செயல்பட வேண்டும். இதற்கு ஓரை சாத்திரத்தை பின்பற்றலாம். குறிப்பாக சூரிய, செவ்வாய், சனி ஓரைகள் அசுப ஓரைகள் என்பார்கள். ஆயினும் சூரிய ஓரையில் நாம் அரசாங்க காரியத்தை மேற்கொண்டால் அது அனுகூலமாக இருக்கும். தினமும் காலையில் அருணோதயத்தில் (அதாவது சூரிய உதயத்திற்கு சற்று முன்னால்) விளக்கேற்றுவதோடு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின் சூரிய ஓரையில் அரசாங்க காரியங்களை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்.

அரசாங்க அதிகாரிகளை சந்தித்து உதவிபெற, புதிய வேலைகளுக்கு முயற்சி செய்ய, உயில் பத்திரங்கள் அக்ரீமென்ட் எழுத, வியாதிகளுக்கு மருந்து உண்ண, வியாபாரத்தில் கூட்டாளி தயவு பெற, பேங்க்-ல் தொடர்பு வைத்து கொள்ள ஆகிய காரியங்கள் வெற்றி கரமாக இருக்கும். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் சூரிய ஓரையில் வீடு குடி போக கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சூரிய ஓரை நேரங்களை எல்லா காலண்டர்களிலும், பஞ்சாங்கங்களிலும் கொடுத்திருப்பார்கள்.

வேலையா? தொழிலா?

ஒருவர் சுய தொழிலைத் தொடங்குவாரா அல்லது யாராவது ஒருவரிடத்தில் வேலைக்குச் செல்வாரா என்பதை பத்தாம் இடம், ஆறாம் இடம் ஆகிய இரண்டு இடங்கள் தெரிவித்துவிடும். ஆறாம் இடம் பெரும்பாலும், அடிமைத் தொழிலை (உத்தியோகத்தை) தீர்மானம் செய்யும் இடமாகும். அதாவது, அரசாங்க வேலையோ தனியார் வேலையோ அல்லது சாதாரண நிறுவனத்தில் ஊழியராக வேலையோ, எது என்பதை நிர்ணயம் செய்வது ஆறாம் இடமாகும்.

இரண்டாம் இடமாகிய தனம், மூன்றாம் இடமாகிய தைரியம் ஆகிய பாவங்களோடு தொடர்பு கொண்டிருந்தாலும், செவ்வாய், சூரியன் முதலிய அரச கிரகங்களோடு தொடர்பு கொண்டிருந்தாலும் உயர் பதவிகள் கிடைக்கும். அதிகாரம் கிடைக்கும். ஆனால் 10-ஆம் இடம் வலுத்து இருந்தாலும், அது தன லாபஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், என்னதான் உத்தியோகம் கிடைத்தாலும், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சுய தொழிலைத் தொடங்கிவிடுவீர்கள்.

நீங்கள் சிறிய டீ கடை வைத்தாவது நாலு பேருக்கு வேலை தருவீர்கள். முதலாளி என்கிற பட்டம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். உங்கள் கையால் யாரோ சிலருக்காவது சம்பளம் தரும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். அதற்கு காரணம் பத்தாமிடம் வலுத்திருப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும்?

ஜாதகக் கட்டங்களை ஊன்றி கவனிக்கும் போது ஓர் அற்புதமான விஷயம் புலனாகிறது. ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கிறது. “ல” என்று எழுத்து உயிர்நிலையான லக்கினத்தைக் குறிக்கும். அதில் ஆரம்பித்து கடிகாரச் சுற்றாக 1,2,3,4 என்று 12 கட்டங்கள் 12 வீடுகளைக் குறிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைக் குறிக்கும்.

லக்னம் – ஒருவன் உயிர்நிலை – ஆத்மா – தலை – ஆளுமைப் பண்பு.
இரண்டு – குடும்பம், செல்வம், கல்வி.
மூன்று – உத்தியோகம், தைரியம் சகோதரர்கள்.
நான்கு – சுகம், தாயார், வண்டி வாகனம்.
ஐந்து – கலை, குழந்தைகள், பூர்வபுண்ணியம், காதல்.
ஆறு – பகை, கடன், நோய், ஸ்திரத்தன்மை.
ஏழு – நண்பர்கள், கூட்டுத்தொழில், மனைவி, கணவன்.
எட்டு – ஆயுள், மாங்கல்யபலம்.
ஒன்பது – தந்தை, பாக்யம்.
பத்து – தொழில்.
பதினொன்று – லாபம்.
பன்னிரண்டு – விரயம்.

மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை அவன் வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களும் ஜாதகக் கட்டங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். என்ன வியப்பு என்றால், பன்னிரண்டு கட்டங்களில் உள்ள விஷயங்களும் ஒரு மனிதனுக்குச் சிறப்பாக அமைந்ததாக ஒரு ஜாதகமும் இல்லை என்பதுதான். கல்வி, தனம், உயர்கல்வி, ஆயுள் என சில ஸ்தானங்கள் வலுத்த ஜாதகத்தில், களத்திரம், சயனசுகம் போன்ற ஸ்தானங்கள் வலுவிழந்து கிடக்கின்றன. சிலருக்கு குழந்தை ஸ்தானம் செயல்படுவதில்லை. சிலருக்கு லாபஸ்தானம் செயல்படுவதில்லை. ஓஹோ.. என்று அமைந்த சில ஜாதகங்களில் ஆயுள் ஸ்தானம் அடிபடுகிறது.

ஜாதகத்தின் கட்டங்களை நுட்பமாக கவனிக்கும் போது, அது நிறைவாகவும் குறிப்பாகவும் சொல்லும் செய்தி இதுதான். எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை. எல்லாருக்கும் எதுவுமே கிடைக்காமலிருந்து விடுவதுமில்லை. ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில செய்திகள் – சில சமிக்ஞைகள் – பொதிந்து கிடக்கின்றன. அவற்றை அறிந்து கொண்டு – அதன்படி நடந்தால் ஏமாற்றங்களைத் தடுக்கலாம். மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

தொகுப்பு: பராசரன்

You may also like

Leave a Comment

twenty − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi