ஜோதிடம் என்பது அற்புதமான கலை. அது நம்முடைய ரிஷிகள், பல யுகங்களாக ஆராய்ச்சி செய்து நமக்கு அளித்த கலை. இப்பொழுது அந்த கலை மிகவும் வளர்ந்து இருக்கிறது, என்பது உண்மைதான். ஜோதிடம் என்பது கணிதமா (arithmetic) இல்லை யூகமா (aasumption) என்றால் “யூகக் கணிதம்’’ என்று நிச்சயமாகச் சொல்லலாம். காரணம், இதில் கணிதமும் (calculation) உண்டு. யூகமும் (forcast on assumption) உண்டு. என்ன சிக்கல் என்றால், கணிதத்தை நீங்கள் போட்டுவிடலாம். ஆனால், கணிதம் சொல்லுகின்ற செய்தியை நீங்கள் யூகித்துத்தான் சொல்ல வேண்டும். அதற்கு மிகப் பெரிய அனுபவம் தேவைப்படும். 4+2=6 என்பது கணிதம். உலகத்தில் எல்லோரும் இதைச் சொல்லிவிடலாம். ஆனால், ஜோதிடத்தில் 4+2=6 என்பதை நீங்கள் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது.நாலின் தன்மை, இரண்டின் தன்மை, அந்த பிளஸ் என்ற கூட்டல் (கிரக வலிமை) குறியீட்டின் தன்மை, வருகின்ற முடிவான ஆறின் தன்மை, இவைகள் எல்லாம் மாறுபட்டுத் தான் இருக்கும். உதாரணமாக; ஆறு என்பது பகையையும் குறிக்கும். நோயையும் குறிக்கும்.
எதிரிகளையும் குறிக்கும். வேலையையும் குறிக்கும். இப்படி பல விஷயங்கள் இந்த ஆறு என்பது காண்பிக்கும். இதில், எந்த ஆறு இந்த கணிதம் சொல்லுகிறது என்பதை நீங்கள் யூகித்துத் தான் சொல்ல வேண்டும்.இது யூகம் என்பதால், இது ஒரு விஞ்ஞான பூர்வமான சாஸ்திரம் இல்லையா? என்று கேட்கலாம். அப்படிச் சொல்ல முடியாது. இதிலும் அறிவியல், கணிதம், (மற்ற கணிதங்களைவிட கஷ்டமான கணிதங்கள் உண்டு) ஒரு உதாரணம் சொல்கிறேன்;ஒருவர் சர்க்கரை வியாதிக்காரரா (diabetic) இல்லையா என்பதை அவருடைய ரத்தத்தின் சர்க்கரை அளவு வைத்து தீர்மானித்துவிட முடியும், என்பதுதான் இன்றைய விஞ்ஞானம்.ஆனால், ஒரே ஒருமுறை ரத்தத்தின் மாதிரி அளவை எடுத்து, அது அதிகமாக இருப்பதால், நிச்சயமாக இவர் சக்கரை வியாதிக்காரர்தான் என்பதை இன்றைய விஞ்ஞானத்தால் கூட பளிச் என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிட முடியாது. காரணம், ஏதோ ஒரு காரணத்தினால் அந்த சர்க்கரை அளவு சோதனை செய்த அன்று அதிகமாக இருந்திருக்கலாம். அப்படியானால், இன்றைய விஞ்ஞானத்தில்கூட ஒரு அளவை வைத்துக் கொண்டு, நாம் அவ்வளவு எளிதாக தீர்மானிக்க முடியாது. அந்த அளவு, அது அந்த குறிப்பிட்ட மனிதருக்கு எப்படிச் செயல்படுகிறது, அதனுடைய விளைவுகள் என்ன, அவர் எப்படி பாதிப்படைகிறார் எல்லாம் நாம் ஆராய்ந்துதான் தீர்மானமாகச் சொல்ல முடியும்.
அதனால்தான் இன்றைய நவீன மருத்துவத்திலும், இரண்டாவது கருத்து (second opinion) என்று போகிறார்கள்.அதேதான் ஜோதிடத்திலும் நடக்கிறது. இன்றைய விஞ்ஞானத்திலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பொழுது, ஜோதிடத்தில் இன்னும் எத்தனை சிக்கல்கள் இருக்கிறது. அதனால்தான் இரண்டு ஜோதிடர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவைச் சொல்வது கிடையாது. காரணம், 6 என்பதை ஒவ்வொருவரும் அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வெவ்வேறு விதமாக யூகிக்கிறார்கள். ஆனால், தொடர் ஆய்வுகள் மூலமாகவும், அனுபவத்தின் மூலமாகவும், சில நல்ல ஜோதிடர்கள் மிக அற்புதமாகவும், சரியாகவும், துல்லியமாகவும் யூகித்து விடுகிறார்கள். யூகம் பெரும்பாலும் சரியாக அமைந்துவிடுவதால், அவர் வெற்றிகரமான ஜோதிடராகப் போய்விடுகின்றார்.ஆனாலும்கூட, அவராலும் 100% பலன்களை சொல்ல முடியுமா என்றால், நிச்சயமாகச் சொல்ல முடியாது. பலன்கள் துல்லியமாக சொல்வதற்கு எத்தனை அளவுகோல்கள் தேவைப்படுகின்றனவோ, அதைவிட மிக அதிகமான மறைமுகமான அளவுகோல்கள் ஜோதிட பலனை தவறாக்குவதற்காகவும் ஜோதிடத்தில் இருக்கின்றன என்பதையும் நாம் அறிய வேண்டும்.
சார், எனக்கு Govt.Job கிடைக்குமா?இன்றைக்கு அரசாங்க வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. நபர்கள் அதிகம். வேலை இடங்கள் குறைவு. ‘அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்’ என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பாக, குரூப் 4 தேர்வுப் பணிக்கு 1,000 பேர் தேவையென்றால், 10 லட்சம் பேர் வரை அப்ளை செய்கிறார்கள். ஆனால், வெற்றி பெறுகின்றவர்கள் 1,000 பேர்தான். ஏன்? மற்றவர்களுக்கு அரசுப்பணி கிடைப்பதில்லை.
ஜோதிட ரீதியாக யார் யாருக்கு அரசுப் பணி கிடைக்கும். 6-ஆம் இடம் வேலை. 2-ஆம் இடம் வருமானம். 10-ஆம் இடம் செயல். (கர்மா, ஜீவனம்) லக்கினம் (உடையவன்). இந்த இடங்கள் வலுவாக இருக்க வேண்டும். சூரியன், செவ்வாய் இரண்டும் அரசு சம்பந்தமான கிரகங்கள். குறிப்பாக, சிம்ம ராசியும், சூரியனும் வலுவோடு இருந்தாலே நிச்சயம் அரசு வேலை உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் 10-ஆம் இடம் சந்திரன். அது விருச்சிகத்தில் நீசம் எனினும், அந்த ராசிக் குரிய செவ்வாய் மகரத்தில் உச்சமாகி நீச பங்கம் பெற்றது. குருவும் சனியும் 11-ல் கூட்டு. லக்ன கேந்திரத்தில் சூரியனும் புதனும் லக்கினாதிபதியின் பார்வை பெற்று இருக்கிறார்கள். இங்கே எத்தனை விதிகள் இணைந்திருக்கின்றன. 20 வயதில் வேலைக்கு போனவர், 38 ஆண்டுகள் அரசாங்க வேலை பார்த்து, ஓய்வு ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அரசைக் குறிக்கும் கிரகம் சூரியனாவார்! சூரிய பகவானே நவகிரகங்களின் அரசர். அவரே ஜாதகத்தில் ஒருவர் அரசு பதவியில் அமர்வாரா? இல்லையா?
என்பதை ஜாதகத்தில் சுட்டி காட்டுவதில் முதன்மையானவர். எவர் ஜாதகத்தில் சூரிய பகவானுக்கு சுப கிரங்களான குரு, சுக்கிரன் மற்றும் வளர் பிறை சந்திரன் போன்ற சுப கிரகங்களின் பார்வையோ, இணைவோ கிடைக்கிறதோ, அவருக்கு நிச்சயம் அரசு வருமானம் உண்டு.சூரியன் எந்த அளவுக்கு வலுத்து சுப கிரகங்களின் தொடர்பை பெற்றுள்ளாரோ, அந்தளவிற்கு அரசு உயர்பதவியில் ஒருவர் இருப்பார். சூரியனுடன் தொடர்பு கொள்ளும் சுபகிரகங்களும் வலுத்திருந்தால், அது இன்னும் சிறப்பு. சூரியன் ஆட்சி, உச்சம், திக்பலம், வர்கோத்தமம் அடைவது போன்ற நிலைகளில் ஒருவருக்கு நிச்சயம் அரசு, அரசு சார்ந்த நற்பலன்கள் உண்டு.