சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 2015ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் அரசு தரப்பு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், இந்த மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.