Thursday, May 16, 2024
Home » ஆசிய விளையாட்டு போட்டி 2023: வெள்ளி வென்றது தமிழக வீரர் ராம்குமார் இணை

ஆசிய விளையாட்டு போட்டி 2023: வெள்ளி வென்றது தமிழக வீரர் ராம்குமார் இணை

by Karthik Yash

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தகுதிச் சுற்றிலேயே தோற்று வெளியேறினர். ஜகர்தா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற அங்கீதா ரெய்னாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது . ஆசிய விளையாட்டில் ஆடவர் இரட்டையர் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு இந்திய இணையான ராம்குமார் ராமநாதன், சாகித் மைநேனி ஆகியோர் முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதிப் படுத்தினர். இறுதி ஆட்டத்தில் அவர்கள் தைவான் இணையான ஜேசன் ஜங், ஷியோ ஷயூ உடன் மோதினர். அதில் தைவான் இணை 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தியது. அதனால் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இணை வெள்ளியை கைப்பற்றியது. இவர்களின் ராம்குமார் ராமநாதன்(28) தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராமநாதன், தாய் அழகம்மை, சகோதரி உமா. லயோலோ கல்லூரி மாணவரான ராம்குமார் சர்வதேச டென்னிஸ் சங்கம்(ஐடிஎப்) போட்டியின் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் இது வரை 15 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

* இறுதி சுற்றில் ஐஸ்வர்யா
இந்தியாவின் தடகள வீராங்கனை ஐஸ்வர்யா மிஸ்ரா மகளிர் 400மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் பந்தயத் தொலைவை 52.73விநாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்தார். கூடவே இன்று நடைபெறும் இறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார். அதேபோல் ஆடவர் 400மீட்டர் ஓட்டத்தின் இந்திய வீரர் முகமது அஜ்மல் தகுதிச் சுற்றில் பந்தயத் தொலைவை 45.76விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

* ஸ்குவாஷில் வெண்கலம்
ஸ்குவாஷ் மகளிர் குழுப் போட்டியில் மகளிர் அரையிறுதியில் ஹாங்காங் மகளிர் அணியிடம் வெற்றிப் வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனைகள் அனஹட்சிங், தன்வி கன்னா, ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிகல் ஆகியோர் வெண்கலத்தை வெற்றனர்.

* வரலாறு படைத்த மனிகா
மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை மனிகா பத்ரா முன்னேறினார். அதனால் ஆசிய விளையாட்டுப் ேபாட்டி டேபிள் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறை மனிகா படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன், சரத்கமன் இணை ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினர்.

* ஹாக்கி மகளிருக்கு முதல் வெற்றி
மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மலேசிய மகளிர் அணியை சந்தித்தது. முதல் பாதியில் 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்ற இந்தியா 2வது பாதியில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது. எனினும் ஆட்ட முடிவில் எதிரணியை கோலடிக்க விடாத இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் மோனிகா, தீப் கிரேஸ், நவனீத், வைஷ்ணவி, சங்கீதா, லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி நாளை நடைபெறும் 2வது ஆட்டத்தில் கொரியாவுடன் மோத உள்ளது.

* பைனலில் போபண்ணா, ருதுஜா
கலப்பு இரட்டையர் காலிறுதியில் நேற்று முன்தினம் வெற்றிப் பெற்று இந்திய இணையான ரோகன் போபண்ணா, ருதுஜா போஸ்லே ஆகியோர் டென்னிசில் இன்னொரு பதக்க வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதியில் தைவான் இணையான யூ-ஹசியூ ஹசு, ஹோ-சிங் சாங் இணையுடன் மோதியது. அதில் 6-1, 3-6, 10-4 என்ற செட்களில் வெற்றிப் பெற்ற இந்திய இணை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டுப் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து விலக இருக்கும் போபண்ணா தங்கத்துடன் விடைபெற வேண்டும் என்பதே இந்திய டென்னிஸ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகி உள்ளது.

You may also like

Leave a Comment

five + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi