லாகூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆசியக்கோப்பை தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது.
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 92 ரன்களும் பதும் நிஸ்ஸங்கா 41 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் 37.1 ஓவரில் 292 ரன்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு என்ற நிலையில் களமிறங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலை உருவானது.
வெற்றிக்காக கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 65 ரன்களும், ஷாஹிடி 59 ரன்களும் எடுத்தனர்.