பொன்னேரி: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து 310 பேருக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த 3ம் கட்ட பயிற்சி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 310 பேருக்கு நேற்று நடந்தது. இந்த, பயிற்சியினை பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள், தகுதி இல்லாதவர்கள் குறித்த, விளக்கத்தினையும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொன்னேரி மண்டல துணை வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பயிற்சிகளை நடத்தினர்.