சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தலில் 13 முறை போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றவரும், 5 முறை தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருந்தவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அன்னாரது புகழ் நிலைத்திடும் வகையிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடிட முடிவு செய்யப்பட்டு இதற்கென பல்வேறு தலைப்புகளில் குழுக்கள் அமைத்து ஆணையிடப்பட்டது. அதில் பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் – கலைஞர் என்ற குழு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில் இக்குழுவின் முதல் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்குழுவின் இணைத்தலைவர்களாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துச்சாமி ,உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் உ றுப்பினர் செயலருமான முனைவர். சந்தீப் சக்சேனா, மற்றும் இக்குழு உறுப்பினர்களான ஏ. எஸ். குமரி, சுந்தர ஆவுடையப்பன், வே. மதிமாறன், வாலாசா வல்லவன், சூர்யா சேவியர், செந்தலை கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புற நடத்துவது குறித்தும் கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்தும் விழா மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.