Friday, May 10, 2024
Home » கலைஞர் நினைவிட அருங்காட்சியகம் நாளை முதல் மக்கள் பார்வையிடலாம்: இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற ஏற்பாடு

கலைஞர் நினைவிட அருங்காட்சியகம் நாளை முதல் மக்கள் பார்வையிடலாம்: இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற ஏற்பாடு

by MuthuKumar

சென்னை: கலைஞர் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, இணைய தளம் மூலம் அனுமதி சீட்டு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டு பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனை பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கலைஞர் உலக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6ம் தேதி (நாளை) முதல் அனுமதிக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையில் உள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும். தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு ஏதும் தேவையில்லை
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையை பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தை பார்வயைிட வரும் பொதுமக்கள் அரசிற்கும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பை வழங்கி கண்டு களித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கலைஞர் உலக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.
* தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

fourteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi