சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என்கிற மூதாட்டி கொலை வழக்கில் கைதான சக்திவேல் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்ததாக, வழக்கில் கைதான சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததும் அம்பலமாகியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10வது தெருவை சேர்ந்தவர் 81 வயதான மூதாட்டி சிவகாம சுந்தரி. கடந்த 22ம் தேதி இவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்ட மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தபோது சிவகாம சுந்தரி மூக்கில் ரத்தம் வந்த நிலையில் படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார்.
அவரது உடலில் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 20 சவரன் நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து பழவந்தாங்கல் ரயில்நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்தபோது, ஏற்கனவே கேகே நகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த கொலையாளி சக்திவேல் என்பவர் பழவந்தாங்கல் ரயில்வேநிலையத்தில் இரங்கி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட சிவகாம சுந்தரி வீட்டின் அருகே இருந்த ஆட்டோவையும் ஆய்வு செய்தபோது, ஆட்டோ கேகே நகரை நோக்கி சென்றது. இதையடுத்து கொலையாளி சக்திவேலை இன்று காலை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டபோது அவர்தான் சிவகாம சுந்தரியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கொலையாளி சக்திவேலுக்கு பணி ஏதும் இல்லாத காரணத்தால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து வாடகை செலுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட சக்திவேல் இதுவரை 3 மூதாட்டிகளை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.