குவாலியர்; சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கிய வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக மத்திய பிரதேச நீதிமன்றம் நிரந்தர கைது ஆணை பிறப்பித்தது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 1995 முதல் 1997ம் ஆண்டு வரையிலான காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கியதாக கூறி, மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் லாலு பிரசாத் உள்பட 23 பேர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு குவாலியரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் எவரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.