சென்னை: கைது நடவடிக்கையை தடுக்க முடியாத மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாஜவையும் மிக அதிக அளவில் வெறுக்கிற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர். 1974ல் இந்தியா – இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து உண்மைகளை திரித்து கருத்துகளை கூறி வருகிறார்கள்.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3,179 மீனவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2016ல் இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020க்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை. தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை ஒன்றிய பாஜ அரசு ஏன் கூட்டவில்லை ? . கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?. தமிழக மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பாஜ அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்னையை திசை திருப்புகிற செயல்.
10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பாஜ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார். இத்தகைய சட்டவிரோத செயலை செய்த அவரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். கச்சத் தீவை மீட்கவோ, இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்தவோ முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள். எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.