Sunday, June 16, 2024
Home » ராணுவ தளங்களின் புகைப்படத்தை அனுப்பி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 4வது குற்றவாளி கைது: உத்தரபிரதேச ஏடிஎஸ் நடவடிக்கை

ராணுவ தளங்களின் புகைப்படத்தை அனுப்பி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 4வது குற்றவாளி கைது: உத்தரபிரதேச ஏடிஎஸ் நடவடிக்கை

by Suresh

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த 4வது குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் உளவுத்துறைக்கு (ஐஎஸ்ஐ), இந்தியாவின் ராணுவம் மற்றும் பிற ரகசியங்களை உளவு பார்த்ததாகக் கூறி, அவ்வப்போது சிலரை புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு உளவு தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோண்டாவைச் சேர்ந்த முகீம் சித்திக் (21) என்பவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோண்டா மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நான்காவது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், ‘உளவு அமைப்புகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் முகீம் சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள ஏடிஎஸ் தலைமையகத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்து வருகிறோம்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், ஆட்சேபனைக்குரிய தரவுகள் உள்ளன. அவை தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே மூவர் கைதான நிலையில், தற்போது 4வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஹுசைன் என்ற நபரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், இந்தியாவில் உள்ள முக்கிய ராணுவ தளங்களின் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அதன்படி ஜான்சியில் ராணுவ தளத்தின் புகைப்படத்தை, குற்றம்சாட்டப்பட்டவர் அனுப்பி உள்ளார். அதற்காக பாகிஸ்தான் நபரிடம் இருந்து பணம் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது’ என்றார்.

You may also like

Leave a Comment

eighteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi