சென்னை: அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக கடந்த 10ம் தேதி மின்னணு முறையில் டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியது. இந்நிலையில், டெண்டரை ரத்து செய்யக்கோரி கிருத்திகா எலக்ட்ரிக்கல் எண்டர்பிரைஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ஏழுமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டெண்டருக்கு விண்ணப்பிக்க உரிய அவகாசம் அளிக்காமல் வெளிப்படை தன்மை இல்லாமல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
உரிய விதிகளை பின்பற்றி டெண்டர் அறிவிக்கப்படாததால் தங்களால் டெண்டரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெண்டரை ரத்து செய்து உரிய விதிகளை பின்பற்றி டெண்டர் மீண்டும் அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த மனுவுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் வர்த்தக பிரிவு மேலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.