மதுரை: அரிக்கொம்பன் யானையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கு நன்றாகவே தெரியும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அரிக்கொம்பன் யானையை சேட்டிலைட் ரேடியோ காலர் மூலம் கண்காணிக்க குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆதிவாசியை சேர்ந்த ஒருவரை இணைத்து குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிக வீரியமுள்ள மயக்க மருந்து ஊசியை செலுத்துவதால் யானையின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வனவிலங்குகளை ஓரளவுக்கு மேல் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஏற்புடையதல்ல என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் நிபுணத்துவம் இல்லாதவர் என்பதால் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.