சிர்சா: அரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கும் நிலையில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அரியானா, சிர்சா தொகுதி வேட்பாளர் குமாரி செல்ஜாவை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். இதையொட்டி நடந்த ரோட் ஷோவில் பிரியங்கா கலந்து கொண்டார். கிரண் சவுத்ரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களும் இதில், கலந்து கொண்டனர்.
பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிடுகையில், அரியானாவில் வேலைவாய்ப்பு பிரச்னை, ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றினால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாட்டிலேயே அரியானாவில் தான் வேலை வாய்ப்பு பிரச்னை அதிகமாக உள்ளது.வரும் தேர்தலில் அதற்கான விலையை பாஜ கொடுக்க நேரிடும். அரியானாவில் காங்கிரசுக்கு ஆதரவாக அலை வீசுகிறது. இந்த தேர்தலில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளார்.