புதுடெல்லி: உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும், அதனை சுற்றியும் நிற்கும் பலர், பள்ளிக்குள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.
அதில் ஆம்ஆத்மி சார்பில்,’பாஜ ஆட்சியில் கல்வி முறை நகைச்சுவையாக மாறி வருகிறது. அரியானாவில் பாஜ அரசின் அரசுப் பள்ளிகளில் முறைகேடு நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், உத்தரபிரதேசத்திலும் 12வது தேர்வு தாள் கசிந்தது. தேர்வுகள் குறித்து விவாதிப்பதாக பிரதமர் மோடி பாசாங்கு செய்கிறார். ஆனால் பாஜ அரசாங்கத்தின் கீழ் மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடுவது குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை’ என்று குறிப்பிட்டு உள்ளது.