கேக் செய்யும் முன் பேகிங் ஓவன் தட்டில் சரியான அளவு நெய் அல்லது எண்ணெய் தடவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். கேக்குக்கு மிருதுத்தன்மையும், மணமும் கிடைக்க ஆரஞ்சுப்பழச்சாறு சேர்க்கலாம். கேக் பேக் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.கேக் செய்யும்போது தேவையான பொருட்களைத் தனித்தனியே அளந்து பிறகு தயாரிக்கலாம்.
கேக்குகளை பெரிய டின்களில் வைத்து அத்துடன் ஆரஞ்சுப்பழத்தோலைப் போட்டு வைத்தால் கேக் கெடாமல் இருக்கும். முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் ஊறவைத்துச் சேர்த்தால் உதிர்ந்து விழாது.கேக் கலவைகளை அதிகம் கலக்கவும் கூடாது. கொடுக்கப்பட்டுள்ள அல்லது உங்களுக்குத் தெரிந்த மூலப்பொருட்களே ஆனாலும் கேக் தயாரிக்க ஆரம்பிக்கும் முன் ஒருமுறை அனைத்தையும் சரிபார்த்து உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.
ஏனெனில் கேக்கிற்கான மூலப்பொருட்கள் விலை அதிகம், வீணாக்காமல் முன்பே தயார்நிலையில் இருப்பது நல்லது. பொதுவாக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்காக கேக் தயாரிக்கப் போகிறீர்கள் எனில் ஓரிரு தினங்களுக்கு முன்பே சின்ன அளவில் ஒத்திகை பார்த்துவிடுங்கள். பொருளும், நேரமும், விரயம் ஆகாது. மேலும் இரண்டாம் முறை செய்கையில் இன்னும் சுவை அதிகமாக கிடைக்கலாம்.
தயாரித்த கேக்குகளை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து பாதுகாப்பதும் அவசியம். போலவே எல்லோரும் கை வைக்காமல் ஒருவர் மட்டுமே அந்த டப்பாவைப் பயன்படுத்தினால் நல்லது. தயாரிப்பு முறையில் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர மற்ற எந்தக் கேக்குகள் தயாரிப்பானாலும் ஓவனின் நடுப்பகுதியில் வைத்து தயாரிக்கவும்.
– அ.ப. ஜெயபால்