*உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்றது. 3 மாதமாக சாலையில் குடிநீர் ஓடி வீணாகிறது. தற்போது வறட்சியான நிலையில் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பரமத்தி அருகே மரவாபாளயத்தில் காவிரி ஆற்றிலிருந்து, பரமத்தி, சின்னதாரபுரம் பிரிவு ராஜாபுரம் அரவக்குறிச்சி வழியாக பெரிய குழாய்கள் மூலம் காவிரி நீர் பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட ஒன்றிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
அரவக்குறிச்சியில் சம்ப் என்னும் சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு இந்த காவிரி நீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய நடுப்பள்ளிக்கு மேல்புறம் அரவக்குறிச்சியில் சம்ப் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரம் ஆயிரக்கானக்கான லிட்டர் குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது. இந்த நிலை மூன்று மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது வரட்சியான கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டிய இந்த தருணத்தில் சாலையில ஓடி குடிநீர் வீணாகிறது.
பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சியில் சம்பந்தப்பட் அதிகாரிகளுக்கு, இந்நிலை குறித்து பல முறை தகவல் தெரிவித்து விட்டதாகவும், இன்னும் சரி செய்யாமல் குடிநீர் வீணாவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 3 மாதமாக சாலையில் காவிரி குடிநீர் ஓடி வீணாகுவதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.