சென்னை: அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் ரூ.13.5 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கி கடந்த 105 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அறந்தாங்கி நகரில் 2 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் பலகோடி ரூபாய் அளவிற்கு வரவுசெலவு செய்யப்படுகிறது. சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும் அதிமுக நகர செயலாளருமான ஆதிமோகன் கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். கடந்த வியாழக்கிழமை 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வங்கியில் 12 மணி நேரத்துக்கு மேலாக அதிரடி சோதனை நடத்தியிருந்தனர்.
மேலும் கூட்டுறவு வங்கியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் ரூ.13.5 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வைப்புத் தொகை, ரொக்க முதலீடு, மக்களுக்கு அளிக்கப்பட்ட வட்டிகள் ஆகியவை குறித்து முறையாக கணக்கு காட்டவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நிதி பரிவர்த்தனை அறிக்கையை ஆய்வு செய்ததில் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.