சென்னை: ஏப்ரல் மாதத்திற்க்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்திட வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் தமிழில் நிறுவுவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறைக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள். கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, முதலில் தமிழில் முதன்மையாக இடம் பெற வேண்டும் என்பதுடன் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வணிகர் சங்கங்கள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தப்பட வேண்டும். ஏப்ரல் மாதத்திற்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்திட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து நகரங்களிலும் இதனைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொ்ள வேண்டும்.