Friday, May 10, 2024
Home » மின்சாரத்துறையில் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் உருவாக்க ஒப்புதல்: அரசாணை வெளியீடு

மின்சாரத்துறையில் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் உருவாக்க ஒப்புதல்: அரசாணை வெளியீடு

by Francis

சென்னை: கடந்த ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், எரிசக்தி உற்பத்தி கழகம் என 3 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் என்ற நிறுவனம் உருவாக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி புதிய பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்க கோரிக்கை வைத்தார். இந்த நிறுவனம் மாநிலத்தின் ஆற்றல் மாற்றத் திட்டங்களை விரைவாக கண்காணிப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும், இந்நிறுவனம் நீர் மின் நிலையம், நீரேற்று மின் நிலையம் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும். மாசு இல்லாத ஆற்றல் தடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை கருத்தாக்கம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

தற்போது செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையையும் பசுமை ஆற்றல் நிறுவனத்துடன் இணைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. பசுமை ஆற்றல் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பில், நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், எரிசக்தி துறை செயலாளர், நிதித்துறை மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர், மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர், நிதி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் ஆகியோர் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரின் கோரிக்கையை பரிசீலித்த அரசு பசுமை ஆற்றல் நிறுவனத்தை உருவாக்கவும், நிறுவனத்திற்கு தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் என பெயரிடவும், எரிசக்தி மேம்பாட்டு முகமையை இந்நிறுவனத்துடன் இணைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய நிறுவனங்களாக பிரிக்கப்படும் வரை உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை செயல்படுத்தும்.

 

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi