சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளராக கிர்லோஷ் குமார் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனி செயலாளராக இருந்தவர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல். இவர் சமீபத்தில் ஒன்றிய அரசின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி, அடுத்த செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துவந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு புதிய செயலாளரை நியமித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேலாண்மை இயக்குனராக இருந்த கிர்லோஷ் குமார், தமிழ்நாடு ஆளுநரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த வினேய் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.