திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு ஆவடி, திருமலைராஜபுரம், ஆவடி ரயில் நிலைய அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. படிவங்களை பெற்று அதனை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வருகின்ற 28ம் தேதி புதன்கிழமை மாலைக்குள் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கடவுச்சீட்டு, பாஸ்போட் அளவு வண்ணப் புகைப்படம் விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும். ஏற்கனவே இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களும் மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் அவசியம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகவும், முழுமையாகவும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.