புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகா தேர்தலின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலை குற்றவாளி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ராகுலுக்கு எதிராக பாஜ மூத்த நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை ஏற்ற உத்தரப்பிரதேச மாநில எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சுல்தான்பூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராகுல் தரப்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
உபியில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக மேற்கொண்டு வரும் ராகுல், யாத்திரைக்கு நடுவே நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விவகாரத்தில் ராகுலின்கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.