ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கொட்டை முந்திரி விலை அதிகரித்துள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளான கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, ராமலிங்காபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கொட்டை முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.
வறட்சியை தாங்கி வளரும் கொட்டை முந்திரிகள் சில ஆண்டுகளிலேயே நல்ல பலன் தரும் என்பதால் இந்தப்பகுதியில் விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் செப்டம்பர் மாதம் கொட்டை முந்திரியில் பூக்கள் எடுத்து டிசம்பர், ஜனவரி மாதத்தில் பழங்கள் பழுக்கும்.
இதில் பழுக்கும் பழங்களை தனியாக பிரித்து, பயன்படுத்திய மீதத்தை விவசாயிகள் நிலத்தில் உரமாக பயன்படுத்துவார்கள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக மரங்களில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகமாக காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு சீசனில் கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் இதே விலை நீடித்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் எனக்கூறிய விவசாயிகள் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொட்டை முந்திரியை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.