Tuesday, May 14, 2024
Home » ஆண்டிபட்டி பகுதி பூக்களை சந்தைப்படுத்த சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்

ஆண்டிபட்டி பகுதி பூக்களை சந்தைப்படுத்த சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்

by Lakshmipathi

*அதிக வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும்

*மல்லிகை, செண்டு பூ விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனை போக மீதமுள்ள பூக்களை சந்தைப்படுத்த சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு கன்னியப்பபிள்ளைபட்டி, கொப்பையம்பட்டி, கொத்தப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, சுந்தரராஜபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூ விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு மல்லிகை பூ, செண்டு பூ, செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, பிச்சி, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும். தண்ணீர் அதிகளவு தேவை படாத இந்த பூ விசாயத்தை விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலமும் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி நகரில் சீனிவாச நகர் பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. மாவட்டத்திலேயே ஆண்டிபட்டி பூ மார்கெட்டில் இருந்து அதிகளவு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் இந்த பூ மார்க்கெட்டிற்க்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இங்கு தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வரை மல்லிகை பூ மட்டும் விற்பனைக்காக வரும். விஷேச காலங்களில் 15 ஆயிரம் கிலோ வரை விற்பனைக்கு வரும்.

இதனை தவிர்த்து மற்ற ஒவ்வொரு பூக்களும் தினந்தோறும் 5 ஆயிரம் கிலோவிற்கு மேல் விற்பனைக்காக வரும். இந்த பூக்களை தேனி, பெரியகுளம், திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்தது போக மீதமுள்ள பூக்களை திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விஷேச காலங்களில் மல்லிகை பூக்களின் விலை சுமார் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூட விற்பனை செய்யப்படும். ஆனால் விஷேசம் இல்லாத காலங்களில் மல்லிகை பூக்களின் விலை 400 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதேபோல் கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை மற்றும் பல்வேறு பண்டிகை காலத்திலும் பூக்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும்.
ஆண்டிபட்டி பகுதியில் விளைவிக்கப்படும் பூக்களை மார்க்கெட்டில் இருந்து நிலக்கோட்டை பகுதியில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இங்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு விலைக்கு பூக்களை பெற்றுக் கொண்டு அதனை வாசனை திரவிய தொழிற்சாலையில் மறு விலைக்கு அனுப்பப்பட்டது.

பூக்களை வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பப்படுவதால் மதியம் 1 மணியுடன் மார்க்கெட்டில் இருந்து பூக்களை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் மதியம் 1 மணிக்கு மேல் பறிக்கும் பூக்களை விவசாயிகள் மார்க்கெட்டிற்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தொழிற்சாலையில் குறைந்த விலையில் பூக்களை கொள்முதல் செய்வதால் மல்லிகை விவசாயிகளுக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கும். மேலும் ஒருசில நேரங்களில் பூக்களை பறிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளால் நஷ்டமும் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர்.

இதனால் கடந்த சில மாதங்களாக ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மல்லிகைப்பூக்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சுபமுகூர்த்தம் அல்லாத நாட்களில் விவசாயிகள் தங்கள் பூக்களை நேரடியாக வாசனை திரவிய தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் விலையும் பூக்களை எல்லாம் பண்டிகை காலங்களிலும் விசேஷ காலங்களிலும் எளிதாக சந்தைப்படுத்த முடியும். பொதுமக்களிடம் அனைத்து பூக்களையும் எளிதாக விற்பனை செய்ய முடியும். ஆனால் மற்ற நாட்களில் பூக்களை சந்தைப்படுத்துவது கடினம். வாசனை திரவிய தொழிற்சாலைக்கு பூக்களை கொடுத்தாலும் போதுமான வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றன. இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூ விவசாயிகளும், வியாபாரிகளும் ஆண்டிபட்டி பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் எந்த நேரமும் பூக்களை சந்தைபடுத்த முடியும். மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கும் அதே விலைக்கே பூக்களை வாசனை திரவிய தொழிற்சாலையில் கொடுத்து அதிக வருவாய் ஈட்ட முடியும். எனவே ஆண்டிபட்டி நகரில் செண்டு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

20 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi