திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் 75ம் ஆண்டு பவள விழா நடந்தது. திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 7 நபர்கள் இலவசமாக வழங்கிய 9.13 ஏக்கர் நிலத்தில் கடந்த 1949ம் ஆண்டு 175 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. 1978ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவ, மாணவிகள் என இருபாலரும் பயின்று வந்தநிலையில், 1998ம் ஆண்டு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியாக மாற்றப்பட்டது.
மேலும், 2015ம் ஆண்டு ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டது. பள்ளி ஆரம்பம் முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுள்ளனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் நிறுவனம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டும், பணி நிறைவு பெற்றும் இருக்கின்றனர். மேலும், இப்பள்ளியில் பயின்ற ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 4 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பெருமை மிக்க இப்பள்ளியில் பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பள்ளியின் சிறப்புகளை பற்றியும், மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் பேசினார்.
பின்னர், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் – ஆசிரியைகளுக்கும், பள்ளி ஆரம்பிக்க நிலம் வழங்கியோர்களையும் பாராட்டி, அவர்களை கவுரவித்து பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில், துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரவி, பெற்றோர் ஆசிரியர் குழு இணை செயலாளர் சுகுமாறன், அரசு வழக்கறிஞர் ஜாகீர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.