Friday, June 14, 2024
Home » அண்ணாபல்கலை கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அண்ணாபல்கலை கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

by Lavanya

சென்னை: சென்னை அண்ணாபல்கலை கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர ப்ராஜெக்ட் கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.600 லிருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத கட்டண உயர்வு. தமிழ்நாட்டில் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வீதம் 4 ஆண்டுகளில் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் இளநிலை பொறியியல் படிக்கின்றனர். பருவத்திற்கு 9 தாள்கள் வீதம் அவர்கள் எழுத வேண்டும். அதன்படி, தேர்வுக்கட்டணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.81 கோடி, ப்ராஜெக்ட் மற்றும் சான்றிதழ் கட்டணமாக ரூ.12 கோடி என இளநிலை மாணவர்களிடமிருந்து மட்டும் ரூ.92 கோடி கூடுதலாக வசூலிக்கப்படும்.

மொத்தக்கட்டணமாக ரூ.277.50 கோடி வசூலிக்கப்படும். முதுநிலை மாணவர்களையும் சேர்த்தால் இவை முறையே ரூ.125 கோடி, ரூ.400 கோடியைத் தாண்டும். இவ்வளவு அதிக கட்டண உயர்வை பொறியியல் மாணவர்களால் தாங்க முடியாது. பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழை மற்றும் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலருக்கு அன்றாடம் கல்லூரி வந்து செல்வதற்கான செலவுக்கே பணம் இல்லாத நிலையில், இந்தக் கட்டண உயர்வை அவர்களால் சமாளிக்க முடியாது. மாணவர்களின் நலன்களையும், அவர்களின் பொருளாதார பின்னணியையும் கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல், பிற பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தும் திட்டமிருந்தால், அதையும் கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

sixteen + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi