விழுப்புரத்தில் விசிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பறந்து சென்றதுதான் மோடியின் சாதனை. அம்பானி, அதானியை உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. ஆனால் மக்களுக்காக என்ன செய்தார்?.
பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டுமக்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல் சட்டத்தை நீர்த்துபோக செய்துவிடுவார்கள். அண்ணாமலை நாள்தோறும் பொய் பேசி வருகிறார். அரசியல் காமெடியன் அண்ணாமலை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை காப்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தை நிறைவேற்ற 40 தொகுதிகளிலும் வெற்றிபெறவேண்டும். அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.