ராமேஸ்வரம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை இன்று மாலை துவக்கி 6 மாதங்கள் நடத்துகிறார். இதனை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கிறார். இதற்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மேடைக்கு எதிரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மேடையில் நின்று கொடியசைத்து, பாதயாத்திரையை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து அண்ணாமலை தலைமையில் ஊர்வலமாக செல்லும் கட்சி தொண்டர்கள் நகரில் பல்வேறு வீதிகளுக்கு சென்று இரவில் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர வாயிலில் முடிக்கின்றனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோர் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளை காலை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து காரில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் சென்று மீனவ மக்களிடம் பேசிவிட்டு யாத்திரையை தொடர்கின்றனர். அமித்ஷா வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.