புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசவில்லை. பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளார். அதை தவிர வேற எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதற்கு அவர் நீட் தேர்வு விலக்கு கோரி அதனை செய்தேன் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் யாருக்கு வேண்டுமென்றாலும் நீட்டிலிருந்து விலக்கு கோர உரிமை உள்ளது. இதில் அண்ணாமலையும் எங்களோடு சேர்ந்து நீட்டிற்கு விலக்கு கேட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக கூறும் அண்ணாமலை, அந்த வழக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம். அண்ணாமலை செய்த ஊழலை எல்லாம் இங்கு யாரும் செய்ய முடியாது. அவர் என்னென்ன தவறுகளை செய்துள்ளார் என்பதை எங்கள் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அண்ணமலையின் வண்டவாளங்கள், தண்டவாளங்களை நாங்கள் காண்பிப்போம். ஆளுநர் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் எங்களது வழக்கறிஞர்கள் பெட்டிசனில் சொல்லியுள்ள வாதங்களை முன்வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.