மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை சிறையில் உள்ளார். இவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் தரப்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆட்சேபத்தை ஏற்ற நீதிமன்றம், அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதித்திட அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை சீராய்வு மனுவாக விசாரிப்பதா, நேரடியாக விசாரணைக்கு அனுமதி கோரும் மனுவாக விசாரிப்பதா, இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 20க்கு தள்ளி வைத்தனர்.