திருவள்ளூர்: ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் உள்ள ஏஎம்எஸ் அகாடமி ஆஃப் ஆர்கிடெக்சர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி நிறுவனங்கள் குழு செயலாளரும், தாளாளருமான எஸ்.சேகு ஜமாலுதீன் தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.எஸ்.ஹஷீபா, மேலாளர் ஷேக் பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் வி.அரவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் இந்திய கட்டிடக்கலை நிறுவனத்தின் தலைவர் விலாஸ் அவசாட் பி.ஆர்க் இளநிலை பட்டமும், பல்கலைக்கழக தரவரிசையில் ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகள் ராகவ் கிருஷ்ணன் (14வது ரேங்க்), டி.ஆர்.ஹரீஷ் (23வது ரேங்க்), ஏ.ஷியாம் (28வது ரேங்க்) மீனாட்சி (30வது ரேங்க்) ஆகியோருக்கு தங்க பதக்கங்கள், தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: நமது நகரங்களை மட்டுமல்ல, நமது சமூகம் மற்றும் தேசத்தின் சாரத்தையும் வடிவமைப்பதில் கட்டிட கலைஞராக உங்கள் பங்கு முக்கியமானது. படைப்பாற்றல், பார்வை மற்றும் நிலையான வடிவமைப்பிற்கான அர்ப்பணிப்புடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். கட்டமைப்பு துறையில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி உங்களிடம் உள்ளது.
மேலும் உங்கள் கட்டிட வடிவமைப்பு கலை முயற்சிகள் உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் புதுமைக்கு சான்றாக இருக்கட்டும் என்றார். இதில் திருச்சி ஐஐஏ மைய பேராசிரியர் ஏ.ஆர்.ஜி.ராஜா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். முடிவில் கல்லூரி துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.ஜே.பால் நன்றி கூறினார்.