சென்னை: தமிழ் பற்றி அமித்ஷா பேசுவது தமிழர்களை ஏமாற்றவே என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: காமராஜருக்கு பிரதமர் வாய்ப்பு வரும்போது அவரே மறுத்து விட்டார். அதே போல, ஜி.கே.மூப்பனாரும் மறுத்து விட்டார். அதில் திமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. காரணம், ஜி.கே.மூப்பனார் பிரதமராக வரவேண்டிய நேரத்தில் திமுகவுக்கு காங்கிரசுடன் தொடர்பு இல்லை. அமித்ஷாவின் தமிழ் மொழி மீதான பாசம் எல்லாருக்கும் தெரியும்.
ரயில்வே துறையில் நேற்று கூட ஒரு விரைவு வண்டியை அறிமுகப்படுத்தி வடமொழி பெயரை வைத்துள்ளார்கள். இவர்கள் தமிழ் என்று பேசுவது தமிழர்களை ஏமாற்றத்தான். இங்கே வந்தால் தமிழ் பற்றி பேசுவார்கள். வேறு இடத்துக்கு சென்றால் வேறொன்று பேசுவார்கள். உண்மையில் பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர் என்றால் பாஜ வெற்றி பெறாது என்பது தான் என்னுடைய எண்ணம். காரணம் 9 ஆண்டுகாலமாக குஜராத் மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை பணக்காரர்கள் எடுத்து கொண்டார்கள்.
வீட்டிற்கு 15 லட்சம் வழங்குவேன் என்று சொல்லி விட்டு, ஏழை எளிய மக்கள் வங்கியில் போட்டிருக்கும் 60 ஆயிரம் கோடி ரூபாயை பணக்காரர்களுக்கு வழங்கிய மாமனிதர் மோடி. அவர்களின் கடன்களை ரத்து செய்தவர் மோடி. மோடி மீண்டும் வரக்கூடாது என்பது தான் தமிழர்கள் எண்ணம். ஒரு வேளை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் பிரதமர் ஆக மாட்டார் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.