வாஷிங்டன் : அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு நிலவியது. அமெரிக்க காவல்துறையின் அவசர எண் 911க்கு வந்த அழைப்பில் அமெரிக்காவின் செனட் சபை கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. எந்நேரமும் துப்பாக்கிச் சூடு நடக்கலாம் என கூறப்பட்டதால் வாஷிங்டன் டி.சி.யில் பதற்றம் தொற்றியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கட்டிடத்திற்குள் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர் செனட் கட்டிட வளாகத்தை அவர்கள் அங்குலம் அங்குலமாக சிறப்பு காவல்படையினர் சோதனையிட்டனர்.
இதனால் அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய சோதனையில் வளாகத்தில் ஆயுதம் எதுவும் சிக்கவில்லை. சந்தேகப்படும்படியான ஆட்கள் யாரும் பிடிப்படவில்லை. இதையடுத்து, 911க்கு வந்த அழைப்பு புரளியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கேபிடால் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே செனட் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக தொலைபேசியில் தகவல் அளித்த நபரை கண்டறியும் பணியில் எஃப்பிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.