வடலூர்: கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் குண்டு சிலையின் பின்னால் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மீது பட்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய அம்பலவாணன் பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் மகன் விஜயராஜ்(20), கோவிந்தசாமி மகன் கிருஷ்ணன்(20), பழனி மகன் சதீஷ்(29), வெங்கடேசன் மகன் வெற்றி(21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.