சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், கலந்து கொண்ட இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் பேசியதாவது: சிங்கப்பூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து எடுத்துக்கூறினர். அதேபோன்று மற்ற நாடுகளை விட அதிகளவில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சிங்கப்பூருக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்ட நெடிய உறவு, நட்பு உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்.தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, தொழில் துறையில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெறும். அதேவேளையில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.