நெல்லை: பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பல் பிடுங்கப்பட்டதாக சூர்யா மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆட்டோ ஓட்டுனர் வேத நாராயணன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட 10 போலீசாருக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசாரிடம் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நெல்லையிலுள்ள சிபிசிஐடி (ஓசியூ) அலுவலகத்தில் ரகசிய விசாரணை நடந்தது. இவர்கள் சாட்சியத்தை டிஎஸ்பி சங்கர் பதிவு செய்துள்ளார். நேற்று மாலையில் சிபிசிஐடியின் மற்றொரு குழுவினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ரகசியமாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தினர்.இந்நிலையில் இன்று வி.கே.புரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன், பற்கள் பிடுங்கிய போது பணியில் இருந்த காவலர்கள் நெல்லையிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.