Thursday, May 16, 2024
Home » அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்

அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்

by Lakshmipathi
Published: Last Updated on

*வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

உடுமலை : உடுமலை அமராவதி வனச்சரகத்தில் கடுமையான கோடை நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம் வனச்சரகத்திற்குட்பட ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகளில் யானை, புலி சிறுத்தை, கரடி, காட்டு மாடு, உடும்பு, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.ஆண்டுதோறும் கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீர் ஓடைகள், அருவிகள், சிற்றோடைகள், குட்டைகள் ஆகிய நீராதாரங்கள் வறண்டுவிடும். கோடை வெயில் காரணமாக மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து பசுமை மறைந்துவிடும். அப்போது வனவிலங்குகள் உணவு தேடியும் தனி தேடியும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர துவங்கும்.

கடந்த மூன்று வாரமாக வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் வனத்துறையினர் வனவிலங்குகளின் தாகம் தணிப்பதற்காக ஆங்காங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.இருப்பினும் யானை போன்ற பெரிய விலங்குகள் தாகத்தைத் தணிப்பதற்காக உடுமலை மூணாறு சாலையில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்து பள்ளம் ஆகிய பகுதிகளில் சாலையை கடந்து அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

எனவே உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு நோக்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் சாலையில் மெதுவாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் சமையல் செய்யக்கூடாது. பீடி, சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வனப்பகுதிகளில் வீசி செல்லக்கூடாது. வனவிலங்குகளை கண்டால் அதனை எரிச்சலூட்டும் வகையில் அவைகளை அடித்தோ அல்லது அருகில் சென்று செல்பி எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

20 − 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi