கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் கொத்தனார் மார்க்கிஸ் (50). இவரது மனைவி முத்தம்மாள். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 28 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இதில் மார்க்கிஸ் தனது தாய் கிருஷ்ணம்மாள் (90) என்பவருடன் தனியாக வசித்தார்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விவசாய கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விவசாய கிணற்றில் இறந்து கிடந்தது கொத்தனார் மார்க்கிஸ் என்பதும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததும், அன்றாடம் கட்டிட பணிக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து வந்ததும் தெரிய வந்தது.