மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 17ம் தேதி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் பதிவு செய்து, அனைத்து சோதனைகளையும் முடித்து இரண்டாவது சுற்றில் மாடுபிடி வீரராக கலந்துகொண்டேன். 3வது சுற்று வரை 11 காளைகளை அடக்கி, விழா கமிட்டியால் இறுதி சுற்றில் விளையாட வைப்பதற்காக வெளியேற்றப்பட்டேன். பின்பு கடைசி சுற்றில் 7 மாடுகள் பிடித்தேன். மொத்தமாக 18 மாடுகள் பிடித்துள்ளேன். ஆனால் விழா கமிட்டி, கருப்பாயூரணியை சேர்ந்த மாடுபிடி வீரரான கார்த்திக் என்பவரை 18 காளைகளை அடங்கியதாக கூறி முதல் பரிசை அவர்களுக்கு அறிவித்தனர். முதல் பரிசு, இரண்டாம் பரிசு அறிவிப்பதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விழா கமிட்டியிடம் முறையிட்டும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.
தன்னை விட ஒரு காளை குறைவாக அடக்கிய வீரர் கார்த்திக்கை முதல் பரிசு பெற்றதாக அறிவித்தது செல்லாது. எனவே, அதிக காளைகளை அடக்கிய என்னை முதல் பரிசு பெற்ற வீரராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை செய்த நீதிபதிகள், மனு குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.