மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக, அழகர்கோயிலில் இருந்து தங்கக்குதிரை வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்கள் இன்று காலை மதுரை வந்து சேர்ந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்பிரசித்தி பெற இந்த விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும். இந்நிலையில், அழகர்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா நாளை மாலை தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து ஏப்.21ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். ஏப்.23ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த வைபவத்திற்காக அழகரின் தங்கக்குதிரை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவை தனித்தனியாக 3 டிராக்டர்களில் மதுரைக்கு இன்று காலை வந்து சேர்ந்தன. இவைகள் அனைத்தும் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 வாகனங்களும் மதுரை சித்திரை திருவிழாவில் மட்டுமே பயன்படுத்தப்படும். பின்னர் அழகர் கோயிலுக்கு திரும்பக் கொண்டு செல்லப்படும்.